Press "Enter" to skip to content

போட்டி ரத்தாகும் சூழ்நிலையிலும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பென் ஸ்டோக்ஸ்

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக தயாராகி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனாவின் தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது காட்டுத்தீ போன்று கொரோனா பரவி வருவதால் ஏப்ரல் 15-ந்தேதிக்குள் கட்டுக்குள் வந்துவிடுமா? என்பது சந்தேகம்தான். இதற்கிடையில் இந்தியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘தற்போதுள்ள நிலையில் என்னுடைய அடுத்த கிரிக்கெட் தொடர் ஐபிஎல்தான். இதுவரை இதில் மாற்றமில்லை. இதனால் ஏப்ரல் 20-ந்தேதி விளையாடுவேன் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை போட்டி நடைபெற்றால் சிறந்த நிலையில் நான் செல்ல வேண்டும். அதனால் உடற்தகுதியை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வைத்திருக்க வேண்டும். என்னால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க முடியாது. ஏப்ரல் 20-க்குள் உடல் தயாராகி விடும். ஏனென்றால் நான் விரும்பும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்காது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »