கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருவதால் இவரை இட்லி பாட்டி என்றே பலரும் அழைத்து வந்தனர்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.
இந்நிலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், கமலாத்தாள் பாட்டியின் பணி மகத்தானது என கூறியுள்ளார். மேலும், ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிக உன்னதமான செயல் என குறிப்பிட்டுள்ள முகமது கைஃப், நமக்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar