Press "Enter" to skip to content

ஜாம்பவானுக்கு நான் விடுத்த சவால் தவறானது- யுவராஜ் சிங்

ஜாம்பவானுக்கு விடுத்த சவால் தவறானது என்றும் கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

மும்பை:

கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பந்தை பேட்டின் விளிம்பால் மேல்வாக்கில் 25-க்கும் அதிகமான ஷாட்டுகள் இடைவிடாமல் அடித்து ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதை சவாலாக ஏற்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இதே போல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அவரது சவாலை ஏற்று தெண்டுல்கர் சற்று வித்தியாசமாக களம் இறங்கி இருக்கிறார். தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு பார்க்காமலேயே சிறிது நேரம் பேட்டின் விளிம்பால் பந்தை தொடர்ச்சியாக மேலே தட்டிவிட்டபடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘யுவராஜ்…. உங்களுக்கு சவாலை திருப்பி அனுப்புகிறேன். ஆனால் இங்கு ஒரு திருப்பம் வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு எளிதான வாய்ப்பை வழங்கினீர்கள். நான் கடினமான சவாலை அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு யுவராஜ் சிங், ‘ஜாம்பவானுக்கு (தெண்டுல்கர்) நான் விடுத்த சவால் தவறானது என்பதை அறிவேன். கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ரோகித் சர்மா பேட்டின் கைப்பிடியால் பந்தை மேல்வாக்கில் அடிக்கும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சக வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ரஹானே ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு இந்த சவாலை ஏற்கும்படி கூறியுள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »