Press "Enter" to skip to content

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கு பங்களிப்பு அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருது வழங்கப்படுவது வாடிக்கையாகும்.

தேசிய விளையாட்டு விருதுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆனால் கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான பணிகள் காலதாமதமாக கடந்த மாதம் (மே) முதலாவது வாரத்தில் தான் தொடங்கியது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்புகள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், அரசு விளையாட்டு ஆணையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் பரிந்துரையுடன் கூடிய தங்களது நகல் விண்ணப்ப படிவத்தை நேற்றுக்குள் (ஜூன் 3-ந்தேதி) தங்களுக்கு கிடைக்கும் வகையில் இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தங்களது வீரர், வீராங்கனைகளின் பெயரை விருதுக்கு பரிந்துரை செய்துள்ளன.

இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த சமயத்தில் வீரர்கள் விளையாட்டு அமைப்புகளிடம் பரிந்துரை கடிதம் பெற்று விண்ணப்பத்தை அனுப்புவதில் சிரமம் இருப்பதால், வீரர்களே தங்களது சாதனை விவரத்தை குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் விருதுக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வீரர், வீராங்கனைகள் செய்த சாதனைகள் இந்த ஆண்டுக்கான விருது தேர்வில் கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »