Press "Enter" to skip to content

10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து தொடருக்கு செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

லாகூர்:

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு 29 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வீரர்களும், மருத்துவ அதிகாரி உள்பட பயிற்சி குழுவினரும் வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டனுக்கு புறப்படுகிறார்கள். இந்த தொடர் ஆகஸ்டு மாதம் தான் தொடங்குகிறது. என்றாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்காக ஒரு மாதத்துக்கு முன்பே பாகிஸ்தான் அணி அங்கு செல்ல இருக்கிறது.

இங்கிலாந்துக்கு தொடருக்கு கிளம்புவதற்கு முன்பாக தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. முதற்கட்டமாக அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், புதுமுக பேட்ஸ்மேன் 19 வயதான ஹைதர் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மற்றும் பஹார் ஜமான், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுப், காஷிப் பாட்டி, முகமது ஹஸ்னைன், இம்ரான் கான் ஆகிய 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அணியின் உதவியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளார். சோதனைக்கு முன்பு வரை இவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததும் அவர்கள் அணியுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மேலும் 10 வீரர்கள் கொரோனாவில் சிக்கி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பு இல்லாத மற்ற வீரர்கள் அனைவரும் இன்று லாகூரில் கூடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் உயரிய மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்து நாளை மறுபடியும் சோதனை நடத்தப்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம்கான் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் திட்டமிட்டபடி தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் பிரதான வீரர்களில் அதிர்ஷ்டவசமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. அதனால் அவர்கள் அங்கு சென்றதும் உடனடியாக பயிற்சியை தொடங்க முடியும்’ என்றார்.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளையாட்டு மருத்துவ இயக்குனர் டாக்டர் சோகைல் சலீம் அளித்த பேட்டியில், ‘எல்லாவிதமான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் கொரோனா தாக்கத்துக்கு இடையே பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பயணிப்பது ‘ரிஸ்க்’ இல்லை என்று சொல்ல முடியாது. நிச்சயம் இந்த பயணம் அபாயகரமானது தான். ஆனால் கிரிக்கெட் போட்டியை இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்றால், இந்த தொடர் அவசியமாகிறது. கொரோனாவினால் சிக்கித் தவிக்கும் இந்த நாடு அதில் இருந்து மீள்வதற்கு இந்த சுற்றுப்பயணமும் உதவிகரமாக இருக்கும்.

இங்கிலாந்து சென்ற பிறகு அங்கு எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பின்னர் 2-வது முறையாக அந்த வீரரை சோதிக்கும் போது, கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ வந்தால் அவர் மறுபடியும் அணியுடன் இணைவார். ஆனால் 2-வது சோதனையிலும் தொடர்ந்து கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீரர் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்.’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »