Press "Enter" to skip to content

சுதந்திரமாக செயல்படுங்கள் என்றார் ஷாருக் கான்: ஆனால் அப்படி நடக்கவில்லை- கங்குலி

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிப்பதற்கு சுதந்திரம் அளிப்பதாகக்கூறி, அப்படி எதையும் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். தற்போது அவர்தான் இருந்து வருகிறார்.

சவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இரண்மு முறை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கம்பிர் அளித்த பேட்டியில் ‘‘ஷாருக் கான் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தார்’’ என்றார். கவுதம் கம்பிர் கூறியதை அறிந்த சவுரவ் கங்குலி, தனக்கு அப்படி ஒரு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க முழு சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கான் உறுதியளித்தார். ஆனால் அப்படி எதுவும் அளிக்கப்படவில்லை. அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் பிறரின் தலையீடு இருந்தது. ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அந்த அணியின் கேப்டன் வசம் அணியை விட வேண்டும். உதாரணத்திற்கு சென்னை அணியை டோனிதான் நிர்வகிக்கிறார். இதேபோன்று மும்பையும் உள்ளது. அங்கு ரோகித் ஷர்மாவிடம் யாரை அணியில் சேர்க்க வேண்டும் என யாரும் கூறுவதில்லை’’ என்றார்.

கங்குலியின் தலைமையில் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. ஒருமுறை 100 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது.

இதனால் கங்குலியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவர் தலைமையில் கொல்கத்தா அணி 27 போட்டிகளில் 13 போட்டிகளை மட்டுமே வென்றது. இதையடுத்து 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கங்குலி நிராகரிக்கப்பட்டு வெளியேறினார். அதன்பின்னர் கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 7 வருடம் விளையாடியது. இதில் 2 முறை கோப்பைகளையும் அந்த அணி வென்றது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »