Press "Enter" to skip to content

2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியது திருப்புமுனை – சிந்து சொல்கிறார்

2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ‘ஆன்-லைன்’ கலந்துரையாடலில் பங்கேற்று பேசியதாவது:-

நான் விளையாடத் தொடங்கிய போது நன்றாகத் தான் ஆடினேன். ஆனால் சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை. முதல் சுற்றில் தோற்பதும், தகுதி சுற்றுடன் வெளியேறுவதும் தொடர்ந்தது. அதன் பிறகு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். 2012-ம் ஆண்டு சீனா மாஸ்டர்ஸ் போட்டியின் கால்இறுதி சுற்றில் அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தினேன். அது தான் எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வேன். அதன் பிறகு மேலும் கூடுதலாக பயிற்சிகளில் ஈடுபட்டு ஆட்டத்திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய போது ரசிகர் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்கினார். அந்த நிகழ்வு மனதை ஆழமாக தொட்டு விட்டது. இப்போது கூட அதை நினைத்து பார்ப்பேன். அதன் பிறகு அந்த ரசிகருக்கு கடிதம் எழுதியதுடன், கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தேன்.

முன்பு எந்த நேரமும் பேட்மிண்டனிலேயே கவனம் இருந்ததால் நேரம் கிடைப்பதில்லை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் சில புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். சமையல் செய்கிறேன். அடிக்கடி ஓவியமும் வரைகிறேன்.

இவ்வாறு சிந்து கூறினார்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »