Press "Enter" to skip to content

ஐபிஎல் போட்டிக்கு 30 முதல் 50 சதவீத ரசிகர்களை எதிர்பார்க்கிறோம்: ஐக்கிய அரபு அமீரகம் போர்டு

ஐபிஎல் போட்டியை காண 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறோம் என ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.  ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார். அக்டோபர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதலில் ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு 30 முதல் 50 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி கூறுகையில் ‘‘இந்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டது என்று பிசிசிஐ எங்களுக்கு தெரிவித்த உடன், நாங்களும், பிசிசிஐ-யும் தயார் செய்யும் பரிந்துரை மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் எங்கள் அரசிடம் கொண்டு செல்வோம்.

பிரபலமான இந்தத் தொடரை எங்களது மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், இது குறித்த அனைத்து முடிவுகளும் அரசை சார்ந்தது. பெரும்பாலான போட்டிகள் இங்கு நடைபெறும் போது 30 முதல் 50 சதவீத ரசிகர்கள் வருவார்கள். தற்போது அதே அளவு ரசிகர்கள் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு அனுமதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »