Press "Enter" to skip to content

டி.ஆர்.எஸ். மட்டும் இருந்திருந்தால் ஒரே பந்துவீச்சு சுற்றில் எப்போதே 10 மட்டையிலக்கு வீழ்த்தியிருப்பேன்: கும்ப்ளே

பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார் அனில் கும்ப்ளே.

இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் 132 போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியது இவரது சாதனையாகும்.

இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேகருக்கு அடுத்தப்படியாக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேதான்.

தற்போது டி.ஆர்.எஸ். முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடுவர் கொடுக்கும் முடிவில் சந்தேகம் இருந்தால், 3-வது நடுவரிடம் முறையிட முடியும். கள நடுவர் கொடுத்தது தவறு என்றால், சரி செய்து கொள்ள முடியும்.

ஆனால் அனில் கும்ப்ளே விளையாடிய காலத்தில் டி.ஆர்.எஸ். கிடையாது. கள நடுவர் என்ன சொல்கிறாரோ? அதுதான் இறுதி தீர்ப்பு. பொதுவாக அனில் கும்ப்ளே வீசும் பந்து பேட்ஸ்மேனில் காலில் படும்போது எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டால் ஸ்டமிற்கு மேல் பந்து செல்ல வாய்ப்புள்ளதாக கருதி நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்துவிடுவார்கள். ஆனால் வார்னே பந்து வீசும்போது நடுவர்கள் கொடுத்து விடுவார்கள். இதுகுறித்து வெளிப்படையாக ரசிகர்கள் விமர்சிப்பது உண்டு.

இந்நிலையில் டி.ஆர்.எஸ். மட்டும் இருந்திருந்தால் நான் எப்போதே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியிருப்பேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நான் பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆறு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தபோது தேனீர் இடைவேளை வந்தது. ஆகவே, தேனீர் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கியபோது கொஞ்சம் சோர்வாக இருந்தேன். ஏனென்றால், உணவு இடைவேளையில் இருந்து தேனீர் இடைவேளை வரை தொடர்ச்சியாக பந்து வீசினேன்.

தேனீர் இடைவேளைக்குப்பிறகு, முன்னதாக பந்து வீசியதுடன் சிறப்பாக பந்து வீச முடிவும் என்று எண்ணினேன். ஆனால் 10 விக்கெட் வீழ்த்துவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

போட்டியின்போது நீங்கள் 10 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அதற்கு ஏற்றபடி நீங்கள் தயாரானாலும் அணியில் முதல் வீரரில் இருந்து 11-வது வீரர் வரைக்கும் எப்படி பந்து வீச முடியும்?. அதனால் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து நினைக்க முடியாது.

8-வது மற்றும் 9-வது விக்கெட்டை வீழ்த்தியபின் என்னுடைய ஓவர் முடிவடைந்தது. ஓவர் முடிந்து தேர்டு மேன் நிலையில் பீல்டிங் செய்ய சென்றபோது, ரசிகர்கள் கவலைப்படாதீர்கள், 10 விக்கெட் வீழ்த்துவீர்கள் என்றார்கள்.

அப்போது ஸ்ரீநாத் ஒருபக்கம் பந்து வீசி கொண்டிருந்தார். நான் ஸ்ரீநாத்திடம் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து ஏதும் கூறவில்லை. ஆனால் நான் 10 விக்கெட் வீழ்த்த அனைவரும் முயற்சி மேற்கொண்டனர்.

ஒருவர் தொடர்ச்சியாக வைடாக பந்து வீசுவது எளிதான காரியம் இல்லை. ரமேஷ் வேண்டுமென்றே கேட்ச் மிஸ் செய்தார் என்று நினைக்க வேண்டாம். அவர் இதுகுறித்து அறிந்திருக்கவில்லை. ரசிகர்கள் கேட்ச்-ஐ விடுங்கள் என்று கூச்சலிட்டனர். பந்து அவரை விட்டு விலகிச் சென்று விட்டது. இல்லையென்றால் அவர் பிடித்திருப்பார்.

என்னுடைய அடுத்த ஓவரை வாசிம் அக்ரம் எதிர்கொண்டார். அவர் தாக்குப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அக்ரம் மிட்-ஆஃப், மிட்-ஆன் திசையில் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் அடிக்க விட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இரண்டு பந்துகள் வீசிய பின்னர், அவர் ஒரு ரன் அடிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

அதனால் பீல்டர்களை அருகில் கொண்டு வந்து பந்து வீசினேன். ஸ்ரீநாத் மேலும் ஒரு ஓவரை அப்படி வீசுவார் என்று என்னால் நினைக்க முடியவில்லை. வாசிம் அக்ரம் பந்து டர்ன் ஆகும் என்று நினைத்தார். ஆனால் பந்து டர்ன் ஆகவில்லை. பந்து எட்ஜ் ஆகியது. லட்சுமண் சிறப்பாக கேட்ச் பிடித்தார். ஆகவே, என்னுடைய சாதனை ஒரு அணியின் ஒட்டுமொத்த முயற்சி. எனக்கு 10 விக்கெட் வீழ்த்தும் அதிர்ஷ்டம் இருந்தது.

டி.ஆர்.எஸ். வாய்ப்பு மட்டும் வழங்கப்பட்டிருந்தால் பாகிஸ்தானுக்கு முன்னதாகவே நான் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »