Press "Enter" to skip to content

ஐ.பி.எல். போட்டியின் போது 5 நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மும்பை:

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தொடர்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயாரித்து உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:-

ஐ.பி.எல். அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள், உதவியாளர்கள் இந்தியாவில் தங்களுடைய அணிகளுடன் இணைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களது அணியுடன் இணைந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். முதற்கட்ட சோதனையில் எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார். பிறகு 24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தால் அந்த வீரர் அமீரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

அமீரகம் சென்றதும் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரு வாரம் தனிமையில் இருப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் குறைந்தது 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் பாதிப்பு இல்லை என்பது தெளிவானதும் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு பயிற்சியை தொடங்குவார்கள்.

ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா சோதனை நடத்தப்படும். வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களை பொறுத்தமட்டில் அமீரகம் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதில் ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தால் மட்டுமே அமீரகம் செல்ல முடியும். கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமை, அதன் பிறகு மேலும் இரண்டு முறை பரிசோதனை போன்ற நடைமுறை அவர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »