புனேயில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனால், ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது. போட்டி நடத்தப்படும் இடத்தை மும்பைக்கு மாற்றலாம் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில், புனேயில் 3 ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்திப்புக்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தற்போதைய தீவிரத்தை கவனத்தில் கொண்டு, முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு பிறகு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar