Press "Enter" to skip to content

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆடுகிறது.

கொழும்பு:

இலங்கைக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 மட்டையிலக்கு வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி 2-ம் தர அணி என்று மதிப்பிடப்பட்டாலும் ஒவ்வொரு வீரர்களும் துடிப்புடன் செயல்படுகிறார்கள். தொடக்க ஆட்டத்தில் கேப்டன் ஷிகர் தவான், இஷான் கிஷன், பிரித்வி ஷா ஆகியோரின் மட்டையாட்டம் அருமையாக இருந்தது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய தீபக் சாஹர் 69 ஓட்டங்கள் விளாசி கதாநாயகனாக ஜொலித்தார். சூர்யகுமார் யாதவின் அரைசதமும் உதவிகரமாக இருந்தது. பந்து வீச்சை பொறுத்தமட்டில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மட்டையிலக்கு வீழ்த்தியதுடன், சிக்கனமாகவும் பந்துவீச்சு செய்து கவனத்தை ஈர்த்தார்.

தற்போது தொடரை வசப்படுத்தி விட்டதால் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி உள்ளிட்டோரில் ஒரு சிலருக்கு இடம் கிடைக்கலாம். மற்றபடி தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையுடன் இந்தியா தயாராகி வருகிறது.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் போதிய அனுபவ வீரர்கள் இல்லாவிட்டாலும் 2-வது ஆட்டத்தில் கடும் சவால் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இறுதி கட்டத்தில் அசலங்கா, சமிகா கருணாரத்னே இருவரும் அதிரடி காட்டி வியக்க வைத்தனர். ஹசரங்காவின் சுழலும் மிரட்டியது.

இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், ‘வீரர்கள் தங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து அதை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். எங்களால் வலுவாக மீண்டு வர முடியும் என்று நம்புகிறேன். சமீப காலமாக நாங்கள் சீராக வெற்றி பெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் வெற்றி பெறுவது எப்படி என்பதை மறந்து விடவில்லை’ என்றார். இலங்கை அணி 2012-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிடம் தோற்று இருக்கிறது. அந்த சோகத்துக்கு முடிவு கட்ட முயற்சிப்பார்கள்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: பிரித்வி ஷா அல்லது தேவ்தத் படிக்கல், ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலன்கா, ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்ஜெயா, லஹிரு குமரா.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »