இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெறும்.
புது தில்லி:
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 21 முதல் 28-ஆம் தேதி வரை ஓமனில் நடைபெறவுள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட மகளிர் அணி ஓமனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இந்த ஆண்டு ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதிப்பெறும்.
இதுகுறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறுகையில், இந்த ஆண்டு உலகக்கோப்பை, ஆசிய போட்டிகள் என அடுத்தடுத்த பெரிய தொடர்கள் வருகின்றன. நாங்கள் ஒலிம்பிக்கிற்கு பிறகு பெரிதாக போட்டிகளில் விளையாடாததால் இந்த தொடர் எங்களை தயார் செய்துக்கொள்வதற்கு உதவும் என தெரிவித்தார்.
இந்தியா தனது முதல் போட்டியை ஜனவரி 21-ம் தேதி மலேசியாவிற்கு எதிராக விளையாடவுள்ளது.
காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு பதில் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar