விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் வருகிறார்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது உப்பென்னா கதை குறித்து விஜய்யிடம், விஜய் சேதுபதி பேசியதாகவும், அப்போது இந்த கதை தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என விஜய் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக் மூலம் விஜய் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து விஜய் சேதுபதி படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவரும் சஞ்சய், சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
Source: Malai Malar