Press "Enter" to skip to content

ரசிகர்களின் செயலால் அஜித் அதிருப்தி – கட்டுப்பாடுடன் நடக்குமாறு அறிக்கையில் வேண்டுகோள்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களின் செயலால் வருத்தமடைந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். விரைவில் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்தார். இந்நிலையில் ரசிகர்களின் செயலால் அதிருப்தி அடைந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறை செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு திரைப்படம் ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு திரைப்படம் ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »