பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் மீது மதநம்பிக்கையை புண்படுத்தியதாக சிவாஜிநகர் காவல் துறை நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை கரீனா கபூருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து கரீனா கபூர் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்டார்.
“பிரக்னன்சி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை அவர் தனது 3-வது குழந்தை என குறிப்பிட்டு இருந்தார். இந்த புத்தகத்தின் தலைப்பில் உள்ள “பைபிள்” என்ற வாசகம் கிறிஸ்தவ மத நம்பிக்கையை புண்படுத்துவது போல அமைந்துள்ளதாக ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங் என்ற அமைப்பு மராட்டிய மாநிலம் பீட்டில் உள்ள சிவாஜிநகர் காவல் துறை நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து சிவாஜிநகர் காவல் துறை நிலைய ஆய்வாளர் சாய்நாத் தோம்ரே கூறுகையில், “நாங்கள் புகாரை பெற்றுக்கொண்டோம். இருப்பினும் சம்பவம் இங்கு நடக்காததால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மும்பை சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
[embedded content]
Source: Malai Malar