நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி:
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறி வரும் குற்றவாளி பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
Related Tags :
Source: Maalaimalar