Press "Enter" to skip to content

வருமான வரி குறைப்பால் பலன் இல்லையா? கொடுப்பதை போல கொடுத்து வேறு இடத்தில் எடுத்த அரசு!

டெல்லி: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் இன்று, தாக்கல் செய்வதற்கு முன்பாகவே தனிநபர் வருமான வரியில் கண்டிப்பாக மாற்றம் வரும் என்று பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.

ஊடகங்களும் இது தொடர்பாக தொடர்ந்து எழுதின. இதனால் மத்திய அரசின் மீது ஒரு வகையில் அழுத்தம் ஏற்பட்டது உண்மை. இந்த நிலையில்தான் தனிநபர் வருமான வரிச்சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆனால் அங்குதான் ஒரு சிக்கல் உள்ளது. ஏற்கனவே உள்ள 70 வகையான வரி கழிவுகளை சேராமல், அதாவது வேறு எந்த முதலீடும் செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே இதனால் ஆதாயம் கிடைக்குமே தவிர பல்வேறு முதலீடுகளில் செலவு செய்து வருபவர்களுக்கு இந்த புதிய அறிவிப்பால் லாபம் கிடைக்காது.

புதிய வரி

புதிய வரி விதிப்பு படி நிர்மலா சீதாராமன் இவ்வாறு அறிவித்துள்ளார்: ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது. 7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும், 10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது, இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும். 12.50 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும், 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.

பழைய முறை

இதற்கு முன்பு 2.5 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் கொண்டவருக்கு 5% வரி, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருவாயை கொண்டவர்களுக்கு 20% வரி, 10 லட்சத்துக்கு மேல் வருவாய் கொண்ட பிரிவினருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

ஆனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை ஆதாரமாக காண்பித்து வரி சலுகைகளையும் பெற முடியும். ஆனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறைப்படி அந்த வரி சலுகைகளை பெற முடியாது.

முதலீடுகள்

எனவே எது சிறந்து, என்பது ஒவ்வொரு தனி நபரை பொருத்தும் மாறுபடும். உதாரணத்திற்கு, இப்போது நீங்கள் எந்த ஒரு முதலீட்டு திட்டங்களிலும், முதலீடு செய்யவில்லை என்றால் நிர்மலா சீதாராமன் தந்துள்ள இந்த புதிய சலுகை உங்களுக்கு பலன் தரும். ஒருவேளை நீங்கள் அதிகப்படியான முதலீடுகளில் பணத்தை செலவிட்டு இருந்தால் பழைய வழிமுறை படி நீங்கள் வரி சலுகையை எதிர்பார்ப்பது தான் உங்களுக்கு பலனைத்தரும்.

கொடுப்பதை போல கொடுத்து

ஏனெனில் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள இந்த புதிய தனிநபர் வருமான வரிச் சலுகைகள் என்பது ஆப்ஷனல். அதாவது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான். எனவே பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இதனால் பலன் கிடைக்கப் போவது கிடையாது. வருமான வரியில் சலுகை என்ற அறிவிப்பு மட்டும் ஊடகங்களில் பெரிதாக இருக்குமே தவிர, உள்ளே உள்ள இந்த விஷயம் நன்கு படித்து பார்ப்போருக்கு தான் புரியும். எனவே கொடுப்பதைப் போல கொடுத்துவிட்டு எடுப்பதைப் போல எடுத்துள்ளது அரசு என்பது தான் உண்மை.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »