டெல்லியில் பணிபுரிந்து வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் 24 ஆயிரத்து 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 210 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும் இந்த கொடிய கொரோனாவுக்கு நாடு முழுவதும் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கை சரிவர அமல்படுத்தும் விதமாக நாடு முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவ்வாறு தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வரும் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பணியாற்றி வந்த சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர், 4 கான்ஸ்டபிள் உள்பட 15 வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வைரஸ் பரவிய சி.ஆர்.பி.எப். வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Source: Maalaimalar