58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
விவசாய விதை பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்வதை தடுக்க கூடாது, அவர்களுக்கு உதவ வேண்டும். விளைபொருட்களை அவர்களே நேரடியாக விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
உணவு பதப்படுத்துதல், உற்பத்தி ஆலைகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் பணியின் போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும். 58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தக் கூடாது.
ரேஷன் கடை பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான். எனவே, டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும். அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது. அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும். கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Source: Maalaimalar