இமாச்சல பிரதேசத்தில் அருவியை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்களை உரிய நேரத்தில் பொதுமக்கள் மீட்டனர்.
சம்பா:
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பா மாவட்டம் பட்டியாத் பகுதியில் உள்ள ஹோபர்டி காட் அருவி பகுதியை கடந்து மறுகரைக்கு செல்வதற்காக சிறுவர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது திடீரென வெள்ளம் அதிகரித்ததால், 4 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர். பாறைகளை பிடித்தபடி போராடிய அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விரைந்து சென்ற உள்ளூர் மக்கள் கடுமையாக போராடி சிறுவர்களை மீட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு இயல்பு அளவை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar