இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, ராணுவ நிலைகளையும் கைப்பற்றவில்லை என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையேயான பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்.
அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதே போன்று நமது ஆயுதப்படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், அதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நமது தேசத்தைப் பாதுகாக்க நமது படைகள் எந்த முயற்சியையும் விடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்த போதிலும், இராஜதந்திர ரீதியிலும் சீனாவிற்கு எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. ஆனால் இறையாண்மையைப் பாதுகாப்பது மிக உயர்ந்தது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Related Tags :
Source: Maalaimalar