Press "Enter" to skip to content

ராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,868 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட புதிய உணவகம்

ராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 868 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவகம் அடுத்த மாதம் (அக்டோபர்) திறக்கப்படுகிறது.

ராசல் கைமா:

அமீரகத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ராசல் கைமா ஆகும். இங்கு உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதியானது பல்வேறு வகைகளில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த மலைப்பகுதி மொத்தம் 6 ஆயிரத்து 500 அடி உயரமானதாகும். இதனால் அமீரகத்தில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த மலைப் பகுதியை காண சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். குறிப்பாக மயிர்கூச்செரிய வைக்கும் சாகசத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் இந்த மலை பகுதிக்குத்தான் செல்ல வேண்டும்.

தற்போது இந்த மலைப்பகுதியில் ஒரு முக்கிய அம்சமாக உணவகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகம் அடுத்த மாதம் (அக்டோபர்) திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த உணவகம் மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் என்ற பெருமையை பெறுகிறது.

இந்த உணவகம் கடல் மட்டத்தில் இருந்து 1,484 மீட்டர் (4,868 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய உணவகம் ஜெய்ஸ் சாகச மையத்தின் அருகாமையில் அமைந்து இருக்கிறது. ஹஜர் மலைத்தொடரில் பள்ளத்தாக்குகள் மத்தியில் மிகவும் ரம்மியமான சூழலில் இந்த உணவகம் அமைகிறது.

இந்த உணவகத்தின் தரைதளத்தில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருப்பதால் தரையில் உள்ள செடிகள் உள்ளிட்டவற்றை காணும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் உணவினை சாப்பிட்டு விடுமுறையை இனிமையாக போக்க கூடிய சூழலை இந்த உணவகம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இது குறித்து உணவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலிசன் கிரின்னெல் கூறும்போது, “ஜெபல் ஜைஸ் மலைப் பகுதியில் உள்ள பல்வேறு பொழுது போக்கு இடங்கள் ஒரு திகில் அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இந்த புதிய உணவகம் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத நினைவுகளை கொடுக்கும். உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் வழிமுறைக்கு ஏற்ப சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும். கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் இது செயல்படும்” என்று தெரிவித்தார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »