Press "Enter" to skip to content

மேற்கு வங்காளம், அசாமில் முதல் கட்ட தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

ஐந்து மாநில தேர்தல்களில் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மொத்தம் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இன்று (27-ம் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. 21 பெண் வேட்பாளர்கள் உள்பட191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதேபோல், 126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் இன்று (27-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி முடிகிறது.

இங்கு முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியைத் தொடர்வதற்காக போராடுகிறது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இங்கு 47 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »