தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார்.
ஆக்ரா:
தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். அவர் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் அவருக்கு இந்திய ராணுவ வீரர்களின் பாராசூட் சாகசங்களை காட்டுவதற்காக ஆக்ராவில் நேற்று காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 30 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 650 படைவீரர்கள் கலந்து கொணடனர்.
இதில் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில், சுமார் 25 பாராட்ரூப்பர்கள், பாராசூட்டில் இருந்து குதித்து அசத்தினார்கள்.
இதே போன்று 80 பாராட்ரூப்பர்கள், 1,250 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டபோது, அவர்கள் தாவிக்காட்டினார்கள்.
இந்த சாகச நிகழ்ச்சிகளை தென்கொரிய ராணுவ மந்திரி சூ வூக் வியந்து பார்த்தார். அவருடன் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவேனயும் இந்த சாகசங்களை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சூ வூக், இந்திய ராணுவத்தின் பாரா கள ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டார். இதுதான் 1950-களில் நடந்த கொரிய போரின்போது தென்கொரியாவுக்கும், ஐ.நா. அமைதிப்படையினருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியது.
இந்தியாவுக்கு தென்கொரியா ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Maalaimalar