4 விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களுக்கு வந்ததால் அதிகப்படியான கூட்டம் அலைமோதியது.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவுக்கு வரும் விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் குவைத், தோகா, சார்ஜா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து அடுத்தடுத்து 4 விமானங்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை கவுண்ட்டர்களில் உள்ள அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனை செய்ய வரிசையில் நின்றனர்.
விமான நிலையத்தில் 3 குடியுரிமை சோதனை கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டதாகவும், மீதம் இருந்த கவுண்ட்டர்களில் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் விமான பயணிகள் வெகு நேரமாக ஒருவர் மேல் ஒருவர் இடித்தபடி நீண்ட வரிசையில் காத்து நின்றதால் கொரோனா முன்னெச்சரிக்கையாக எந்த ஏற்பாடுகளும் சரியாக செய்யவில்லை என்று கூறி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கூடுதலாக மேலும் 2 சோதனை கவுண்ட்டர்களை திறந்தனர். விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டரில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகள் குவிந்து இருப்பதை பயணி ஒருவர் செல்போனில் காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar