8 அணிகள் பங்கேற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
அபுதாபி:
14-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெற்றது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன.
எனவே, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மட்டுமே இருந்தன.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.587 ஆக உள்ளது. எனவே கொல்கத்தா அணிக்கே பிளே ஆப் சுற்று வாய்ப்பு அதிகமாக இருந்தது.
அபுதாபியில் நேற்று நடந்த மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்றது. ஆனால் நிகர ரன்ரேட் 0.116 ஆக உள்ளது.
எனவே, நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்குள் 4-வது அணியாக நுழைந்தது.
நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்- 2 சுற்றுக்கு முன்னேறும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar