Press "Enter" to skip to content

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டது- அமைச்சர் பொன்முடி பதில்

26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், 55 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், “ஊட்டி தொகுதி குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிநுட்பம் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் பாலிநுட்பம் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேருவதில்லை. ஊட்டி பகுதிகளில் உள்ள பாலிநுட்பம் கல்லூரிகளில் இருக்கும் 705 மொத்த இடங்களில், 265 இடங்களில் தான் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பாலிநுட்பம் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே “நான் முதல்வன்” திட்டம் கொண்டுவரப்பட்டது.

வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால் ஊட்டி மஞ்சூரில் பாலிநுட்பம் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும். 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், 55 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப் பிரிவு கொண்டு வரப்படுவதோடு, 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »