Press "Enter" to skip to content

“என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்” – நாகேஷுக்கு கமல் புகழஞ்சலி

‘என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்’ என மறைந்த நடிகர் நாகேஷின் நினைவுநாளையொட்டி அவருக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் 60, 70-களில் முண்ணனி நகைச்சுவை நடிகராக விளங்கிய நாகேஷ், எண்பதுகளின் இறுதியில் வில்லத்தனமான வேடங்களையும் ஏற்றார். கமலஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் முதன்மை பகைவனாக கமலஹாசனின் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழிக்கும் வேடம் ஏற்றிருப்பார். கமலின் ‘நம்மவர்’ படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ். ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அவ்வை சண்முகி’ ‘பஞ்ச தந்திரம்’ படங்களில் நாகேஷ் – கமல் காம்போ நகைச்சுவைகள் ஹிட்டடித்தன. ‘வசூல் ராஜா’ படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை நெகிழவைத்தன.

கமலுடன் நாகேஷ் பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தமிழ் திரைப்படத்தின் மறக்கமுடியாத நடிகரான நாகேஷ் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மறைந்தார். இந்நிலையில், அவரது நினைவுநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,“மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »