நடிகை சமந்தா, ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஏப். 14ம் தேதி படம் வெளியாகிறது.
இந்தப் படத்தைப் பார்த்த சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நமது காவியங்களில் ஒன்றான இந்தக் கதையை அழகாக எடுத்திருக்கிறீர்கள். இதன் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் குடும்பமாக நிச்சயம் மகிழ்வார்கள். குழந்தைகளும் இந்த மாய உலகத்தை ரசிக்கப் போகிறார்கள். இந்த அற்புதமான பயணத்துக்காக, தில் ராஜுக்கும் நீலிமாவுக்கும் நன்றி. இந்தப் படம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Source: Hindu