Press "Enter" to skip to content

ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கோப்பை என்பது சரியாக இருக்காது: மேக்ஸ்வெல் சொல்கிறார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் டி20 உலக கோப்பை ரசிகர்கள் இல்லாமல் நடக்கக் கூடாது என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நாளைமறுதினம் (15-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் போட்டி நடைபெறும் என ரசிகர்கள் மட்டுமல்ல, வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.

ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்பது உறுதியாகிவிட்டது, அதேபோல் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்று சில வீரர்கள் தங்களது விருப்பதை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 உலக கோப்பை நடைபெற்றால் நன்றாக இருக்காது என ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை வேண்டுமென்றால் நடத்தலாம், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை என்னால் பார்க்க முடியாது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது ரசிகர்கள் மைதானத்தில் இல்லாதது என்பதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது. வருங்காலத்தில் இப்படி நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவருடைய உடல்நலத்திலும் அக்கறை செலுத்துவது முக்கியமானது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »