ரோவ்மன் பாவெல் தனது குடும்பம் குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மும்பை:
15-வது ஐபிஎல் பருவத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வரும் வீரர் ரோவ்மன் பாவெல். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.80 கோடி கொடுத்து டெல்லி அணி விலைக்கு வாங்கியது.
இந்நிலையில் ரோவ்மன் பாவெல் தனது குடும்பம் குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
நான் எனது தந்தையை நேரில் பார்த்தது இல்லை. என் தாயின் வயிற்றில் நான் கருவாக இருந்தபோதே, அவற்றை கலைக்குமாறு எனது தந்தை என் தாயை துன்புறுத்தினார். ஆனால், என் தாய் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் என் தந்தை எங்களை விட்டு சென்றுவிட்டார்.
ஜமைக்காவில் உள்ள பழைய துறைமுகத்துக்கு அருகே பானிஸ்டர் மாவட்டத்தில் 2 அறைகள் மட்டுமே இருக்கும் சிறிய வீட்டில்தான் நான் பிறந்தேன். என்னையும், என் சகோதரியையும் என் தாய் ஜோன் மிகவும் கஷ்டங்களுக்கு இடையில் வளர்த்தார். என் தாயைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் போதாது.
நான் எப்போதெல்லாம் மனம் தளர்ந்து இருப்பேனோ அப்போதெல்லாம் என் தாயை மனதில் நினைத்துகொள்வேன். நான் எனக்காக எதையும் செய்யவில்லை. நான் என் தாய்க்காகவும், சகோதரிக்காகவும் செய்கிறேன் என்பதை மட்டும் நினைத்துக்கொண்டே இருப்பேன்.
இவ்வாறு ரோவ்மன் போவல் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar