கொரானா வைரஸின் தாக்கத்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதால் நடிகர் உதயா தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
நடிகர் உதயா தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த கொரானா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.
நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்… ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்.
அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் “மாநாடு”படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: Malai Malar