பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
50 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஏராளமான வெற்றிப்படங்களை ‘வைஜெயந்தி மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. குறிப்பாக தெலுங்கு திரையுலகில் இவர்களின் பங்களிப்பு ஏராளம். இவர்களின் தயாரிப்பில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம், தேசிய விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச விருதுகளையும் வென்று சாதித்தது.
இதனிடையே ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களான பிரபாஸ் – தீபிகா படுகோனே நடிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தபடத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்திய திரையுலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தை வருகிற 2022-ம் ஆண்டு உலகளவில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
[embedded content]
Source: Malai Malar