இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும்,
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இதற்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி, ஒரு இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி, “நான் என் மகனுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அவன் நன்றாக இருக்க வேண்டுமென்று 1993இல் அவருக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கினேன். தற்போது அவர் உச்ச நட்சத்திரமாகி விட்டார். அதனால் அவர் எனக்கு பிள்ளை என்று ஆகிவிடாது. அவரை நான் இன்னமும் குழந்தையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதை நான் அவரது நல்லதாகவே செய்துள்ளேன். அதை அவர் விரைவில் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.
தனது ரசிகர்களை நான் தொடங்கியுள்ள கட்சியில் சேர வேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்பா அவரது நல்லதுக்குதான் செய்தார் என்பதை அவர் புரிந்து கொள்வார். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். நான் பொதுவாகவே விஜய்யிடம் ஆறு மாதத்திற்கு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் பேசுவேன். தற்போது அவரிடம் பேசுவது சரியாக இருக்காது. எனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதுபோல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதை வரலாறு தானே.
விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன். அதை தற்போது நான் அரசியல் கட்சியாக மாற்றி உள்ளேன். எனது மனைவி சோபாவுக்கு அரசியல் கட்சியில் சேர விருப்பம் இல்லை என்றால் அவர் விலகிக் கொள்ளட்டும். அவருக்கு பதிலாக நான் வேறு ஒருவரை பொறுப்பாளராக போடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும் பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான். விஜய் தான் என் கடவுள். அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் உடையும். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார். அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
[embedded content]
Source: Malai Malar