எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? என்ற கேள்விக்கு நடிகை சரோஜாதேவி பதில் அளித்துள்ளார்.
நடிகை சரோஜாதேவி பெங்களூரு மல்லேசுவரம் 11-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி சரோஜாதேவியின் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கலந்துகொண்டு சரோஜாதேவி சாமி பார்வை செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். பின்னர் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஒரு திடமான முடிவை எடுத்து உள்ளார். அவரது முடிவை நான் பாராட்டுகிறேன். கமல்ஹாசனும் அரசியல் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? என்று உறுதியாக சொல்ல முடியாது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்ப்போம். சில நேரங்களில் படங்கள் தோல்வியும் அடையும். அதுமாதிரி தான் அரசியலில் நடிகர்கள் வெற்றியும், தோல்வியும் அடைவார்கள். எம்.ஜி.ஆர். எங்களுக்கு ஒரு தெய்வம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நான் வாழ்நாளில் செய்த புண்ணியம் என்றார்.
[embedded content]
Source: Malai Malar