நடிகைகளை விட கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகை டாப்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தமிழில் ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன.
இயக்குனர்கள் டாப்சியை மனதில் வைத்து கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகளை உருவாக்குகின்றனர். இந்த நிலையில் நடிகைகளை விட கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு டாப்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
டாப்சி
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “திரைப்படம் துறையில் சம்பள விஷயத்தில் நடிகர், நடிகைகள் இடையே வித்தியாசம் பார்க்கப்படுகிறது. ஒரு நடிகை அதிக சம்பளம் கேட்டால் இந்தி பட உலகினர் அவரை விமர்சிக்கின்றனர். அந்த நடிகையின் மீது, சர்ச்சைக்குரியவர், சிக்கலானவர் என்றெல்லாம் முத்திரையும் குத்துகின்றனர்.
அதே நேரம் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டால் அதை ஏற்கின்றனர். சம்பளம் அதிகம் கேட்பது அவரது வெற்றிக்கான அங்கீகாரம் என்றும் கூறுகின்றனர். என்னுடன் ஒரே காலகட்டத்தில் நடிக்க வந்த நடிகர்கள் தற்போது என்னை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வரை அதிகம் சம்பாதிக்கின்றனர்” என்றார்.
[embedded content]
Source: Malai Malar