ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி, அமெரிக்க குடிமகளாக நான் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
உலகப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் சூழல் குறித்து கடும் வருத்தம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க தவறு செய்துவிட்டது என்பதைக் குறிக்கும் விதமாக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி கடும் விமர்சனம் வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஏஞ்சலினா ஜோலி, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதனால் தாலிபான்களின் கைகள் ஓங்கி வெறும் 10 தினங்களில் நாட்டையே பிடித்துவிட்டனர். இந்த நிலைக்கு ஆப்கானிஸ்தானை ஏன் தள்ள வேண்டும் என்று ஏஞ்சலினா ஜோலி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஏஞ்சலினா ஜோலி
மேலும் நம்மை நம்பிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை இப்படி பாதியில் கைவிட்டுள்ளது பலரது தியாகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் அவர் சாடியிருக்கிறார். இன்னும் கடுமையாக அமெரிக்க குடிமகளாக நான் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சாமானியர்களின் நிலைமை இனி என்னவாகும் என்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் பல வருடங்களாகக் கொடிக்கட்டிப் பறந்துவரும் நடிகை ஏஞ்சலினா ஜோலி திரைப்படத்தைத் தவிர சமூக பணிகளிலும் அக்கறை கொண்டவர். இவர் சுற்றுச்சூழல் தொடர்பான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Malai Malar