பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா சிக்கி உள்ளது.
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடா்பாக பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்திருந்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூருவில் கடந்த 12-ந்தேதி போதைப்பொருள் விற்பனையாளரான நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் நேற்று காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 40 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நடிகை சோனியா அகர்வாலை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
[embedded content]
Source: Malai Malar