நடிகர் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையை சமீபத்தில் நீக்கிய நிலையில், தற்போது அவரது படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்தின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. அதையடுத்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது வடிவேலு நடிக்க இருக்கும் முதல் படமான ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர் சதிஷ் மற்றும் குக்வித் கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ளது. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்ட்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாய் சேகர் என்ற தலைப்பை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றனர். எனவே வடிவேலு, அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் படத்தின் கதைப்படி தலைப்பு மிக முக்கியமாக இருப்பதால் மறுத்து விட்டார்களாம். படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் இருப்பதால் படத்தின் தலைப்பு அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். விரைவில் இந்த சிக்கல் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
[embedded content]
Source: Malai Malar