பல படங்களில் நகைச்சுவை வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது நாயகியாக களமிறங்க இருக்கிறார்.
தமிழ் திரைப்படத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்கவுள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[embedded content]
Source: Malai Malar