பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஹுமா குரேஷி அஜித்தை பற்றியும் அவருடைய ரசிகர்களை பற்றியும் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வெளிவர காத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹூமா குரேஷி அஜித் ரசிகர்களை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடிகை ஹுமா குரேஷி கூறியதாவது, வலிமை திரைப்படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. பில்லா-2 திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது இயக்குனர் எச். வினோத் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வினோத் வலிமை திரைப்படத்தின் கதையை சொன்னபோது நான் மிகவும் சுவாரசியமாக உணர்ந்தேன்.
ஹுமா குரேஷி
இதற்கு முன்பு நான் காவல் துறை கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இந்த திரைப்படத்தில் காவல் துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. ஒவ்வொரு முறையும் ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். பொதுவாக பெண்களை இதுபோன்ற பாத்திரங்களில் பார்த்திருக்க மாட்டோம். இயக்குனர் வினோத்துக்கு தொலைநோக்கு பார்வை இருப்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த திரைப்படத்தில் எனக்கும் அஜித்துக்கும் இடையே உள்ள உறவை மிகவும் சுவாரசியமாகவும் வித்தியாசமான ஒன்றாகவும் இயக்குனர் வினோத் கொடுத்துள்ளார். கொரோனா வந்த போது படக்குழு மிகவும் சோர்ந்து போனோம். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அஜித் ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பு மிகவும் அற்புதமானது. கடந்த இரண்டு வருடங்கள் அனைவருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் அஜித் ரசிகர்களிடமிருந்து வந்த குறுஞ்செய்திகள் எனக்கு உத்வேகம் அளித்தது’ என்று கூறியுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar