ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். அதேப் போல வேட்பாளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது வாக்கினை கலைமகள் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து சம்பத் நகரில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் தனது மனைவியுடன் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த காரணத்தைக் கொண்டும் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : விறுவிறு வாக்குப்பதிவு…காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்…!
அக்ரஹாரம் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் வாக்கு செலுத்த வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டை அணிந்து வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் கட்சி துண்டை அகற்றும் படி கூறியதால் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு கட்சி துண்டை எடுத்து விட்டு தனது வாக்கினை செலுத்தினார்.
9 மணியளவில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வாக்கினை பதிவு செய்தார். கச்சேரிவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தனது மகனுடன் வந்த அவர், வரிசையில் காத்திருந்து வாக்கை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுவதாக தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு கட்சி துண்டுடன் வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, கட்சி துண்டை அகற்றிய பின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Source: Malai Malar