இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சந்திரயான் 3, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் 3, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விருது வழங்கி மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் கவுரவம் செய்தார்.
இதையடுத்து விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய சோம்நாத், நிலவை நோக்கிய வெற்றிப் பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியதாகவும், இதற்குக் காரணமான அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அனைத்தும் சரியாகச் செல்லும் பட்சத்தில், ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கும் எனவும் அவர் கூறினார்.
இதையடுத்துப் பேசிய மத்திய புவி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங், கனவுகளை அடைய வானம் கூடத் தடையில்லை என்பதை இஸ்ரோ நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : பிரம்மாண்டமாக நடைபெற்ற பாஸ்டில் விழா…ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் சாகசம்!
இந்நிலையில் இந்திய விண்வெளித் தொழில்நுட்பத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை சந்திரயான் 3 ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இந்திய விண்வெளி வரலாற்றில் சந்திரயான் 3, ஒரு புதிய அத்தியாயத்தை இன்று பதிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மகத்தான திறமை, அர்ப்பணிப்பால் சந்திரயான் 3-ஐ விண்ணை அடையச் செய்த இஸ்ரோவின் அசாதாரணக் குழுவினருக்கு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Chandrayaan-3 scripts a new chapter in India’s space odyssey. It soars high, elevating the dreams and ambitions of every Indian. This momentous achievement is a testament to our scientists’ relentless dedication. I salute their spirit and ingenuity! https://t.co/gko6fnOUaK
— Narendra Modi (@narendramodi)
சந்திரயான் 3 பயணம், வெற்றிகரமாகவே முடியும் என்பதில் சந்தேகமில்லை என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், கேரளாவில் உற்சாகத்துடன் பேட்டியளித்துள்ளார். இஸ்ரோ மூத்த விஞ்ஞானியும் இந்திய ராக்கெட் பெண் என அழைக்கப்படுபவருமான ரித்து கரிதாலின் லக்னோ இல்லத்தில் இனிப்புகள் வழங்கி குடும்பத்தினர் கொண்டாடினர்.
Source: Malai Malar