Press "Enter" to skip to content

தமிழக அரசியலில் அறிஞர் அண்ணாவும், பெரியாரும் தவிக்க முடியாதவர்கள்..!!சுப.வீரபாண்டியன்

இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள், அரைக்கை கதர் சட்டை,மூக்குபொடி டப்பா வோடு வலம் வந்து தமிழகத்தில் நல்லாட்சி தந்தவர்; குறுகிய காலம் முதல்வராக இருந்தாலும் தமிழகத்தில் பல மாற்றங்களை தந்தவர் அறிஞர் அண்ணா.தமிழக அரசியலில் அறிஞர் அண்ணாவும், பெரியாரும் தவிக்க முடியாதவர்கள். தமிழ்நாட்டில்  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் என்று அங்கீகரிக்கப்படும் தலைவர் மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரை ஆவார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தமிழ் சேனல் ஒன்றில் அறிஞர் அண்ணா பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் சில…

“அண்ணாவின் அரசியல் என்பது மொழி உரிமை, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றை வலியுறுத்தியது.மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கம் தொலைநோக்குப் பார்வையோடு அண்ணாவால் முன்வைக்கப்பட்டது. அண்ணா 1969ல் இறந்துவிட்டாலும், அந்தக் கோரிக்கை இன்னமும் வலிமையாக நிற்கிறது. முன்பை விட அதற்கு இப்போது தேவை அதிகமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அந்தச் சிந்தனை தற்போது வந்திருக்கிறது” என்கிறார் சுப.வீரபாண்டியன்.

இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று வந்தபோது அது விவாதத்துக்குள்ளாகி இந்தியும், ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது.
 நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 14 மொழிகளும் (தற்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன) ஆட்சி மொழியாக வேண்டும். அது நடக்கும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னிறுத்தவில்லை. இந்திக்கு மாற்றாகவே ஆங்கிலத்தை முன்னிறுத்தினார் என்றார்.

பெரியாரின் கடவுள் மறுப்பை மாற்றி திமுக-வின் நிலைப்பாடாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அறிவித்தார் அண்ணா. அது பெரியாரின் நிலைப்பாட்டை நீர்த்துப் போகச் செய்தது என்ற விமர்சனத்தைச் சுட்டிக் காட்டியபோது, “பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ள சமூகத்தில் அவர்களது நம்பிக்கைக்கு மாறாகப் பேசி தேர்தல் அரசியல் நடத்துவது கடினம்.

 பெரியாரைப் போலல்லாமல் இணக்கமாகப் போகவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. எனவே திருமூலரிடம் இருந்து “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற வரியை எடுத்துக்கொண்டார்.
” முப்பத்து முக்கோடி தேவர்கள் “என்பதையும், ‘கடவுள் இல்லவே இல்லை’ என்பதற்கும் இடையில் கடவுள் ஒன்று என்று சொன்னார். ஒன்று என்பது பூஜ்ஜியத்துக்குதான் நெருக்கமானது. முப்பத்து முக்கோடிக்கு நெருக்கமானதல்ல. மேலும், அந்த முழக்கத்தில் சாதியை மறுக்கும் ‘ஒன்றே குலம்’ என்பதே முக்கியமான பகுதி”, என்றார்.

முதல்வராக அண்ணா இரண்டாண்டு காலம் ஆட்சியில் இருந்தார். அந்தக் குறுகிய காலத்தில் அவர் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். கல்வியில் இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்தார். சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்.

திருமணத்தில் பெண்ணை கன்னிகாதானம் என்று சொல்லி, பொருளாகப் பாவித்து தானம் செய்யும் வழக்கம் இருக்கிறது. இதற்கு மாற்றாக பெரியார் சொல்லி வந்த சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தந்தது முக்கியமானது.

மேடைப் பேச்சில் தமக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டவர் அண்ணா. தமிழ்நாட்டு அரசியலில் மேடைப் பேச்சு பாணியில் அண்ணாவின் செல்வாக்கு இன்றுவரை உண்டு என்றார்.

 தெ.பாலமுரு கன்

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »