Press "Enter" to skip to content

முதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு

முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தேசிய சமூக உதவி திட்டத்தின்கீழ் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் 2 கோடியே 98 லட்சம் பேர் பலன் பெறுகின்றனர்.

60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.200, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

40 வயது முதல் 79 வயது வரையிலான விதவைகளுக்கு மாதம் ரூ.300, மேலும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விதவைகளுக்கு மாதம் ரூ.500 ஓய்வூதியமாக அளிக்கப்படுகிறது.

79 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிற நிலையில், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் முதியவர்கள், விதவைகள், மாற்று திறனாளிகள் ஆகியோரின் நலன்களைப் பேணுகிற வகையில் இவர்களுக்கு 3 மாத ஓய்வூதிய தொகை முன்கூட்டியே வழங்கப்படுகிறது.

இந்த தொகை ஏப்ரல் மாதம் முதல் வாரம் அவர்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும்.

ஏற்கனவே இவர்களுக்கு கூடுதலாக தலா ரூ.1,000 உதவித்தொகை, 3 மாதங்களில் 2 தவணைகளில் கருணைத் தொகையாக வழங்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்றுமுன்தினம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இந்த தகவல்களை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »