நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். இந்த கடனுதவி பிணையின்றி வழங்கப்படும். இதனால் நாடு முழுவதும் 45 லட்சம் நிறுவனங்கள் பயன் அடையும். இந்த கடனுதவி பெற அக்டோபர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த அறிவிப்புகள் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar