உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார அமைப்பின் 2 நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மே 22-ம் தேதி பதவியேற்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் காணொலி காட்சி மூலம் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் ஹர்ஷ வர்தன் 3 ஆண்டு காலம் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஹர்ஷ வர்தன் மிகப்பெரிய பொறுப்பை வகிப்பது இந்தியாவுக்கு பெருமை. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar