கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து அனுப்பியதற்காக சீசெல்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து அனுப்பியதற்காக சீசெல்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டு வரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களின் நலனை உறுதி செய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.
மேலும், பிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்து அனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே பாராட்டு தெரிவித்தார்.
இதேபோல், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டாவது கட்டமாக மருந்துப் பொருள்களை அனுப்பி வைத்ததற்காக சீசெல்ஸ் அதிபர் டேனி பயூர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Source: Maalaimalar