Press "Enter" to skip to content

கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முதல்மந்திரியும், பாஜகவின் முக்கிய தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்மந்திரியாக எடியூரப்பா செயல்பட்டு வருகிறார்.   

இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்மந்திரி பிஎஸ் எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்தார். 

இந்நிலையில், முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முதல்மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து எடியூரப்பா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ எனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது நலமுடன் உள்ளேன். டாக்டர்களின் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »